“குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளிலும் எப்போதும் ஒரே விதமான நிலத்தடி நீர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. பொதுவாக, ஆழ்துளைக் கிணறு அமைப்பைப் பொறுத்தவரை, பல்வேறு பாறை அடுக்குகளில் உள்ள உப்புப் படிமங்கள் நீருடன் கரைந்து வெளியேறும். அந்த அடுக்கில் உள்ள உப்புத்தன்மையைப் பொறுத்து, நிலத்தடி நீரில் உப்பின் அளவு மாறுபடும். இது நிலத்துக்கு நிலம் வேறுபட வாய்ப்புள்ளது. நீர்மூழ்கி மோட்டார் இயங்கும்போது, அதில் உள்ள விசிறி சுழன்று, எந்தக் கனிம அடுக்கை அரிக்கிறதோ அதில் உள்ள உப்பானது நீரில் கரைந்துவிடும். இதைப் பொறுத்தும், நிலத்தடி நீரின் உப்புத்தன்மையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். விளைநிலத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தால், அதில் உள்ள உப்புத்தன்மை மழைநீர் மற்றும் பாசனநீரின் மூலமாக நிலத்தடி நீரில் கலப்பதற்கும் வாய்ப்புள்ளது.
நீங்கள், உங்களுடைய ஆழ்துளைக் கிணற்று நீரின் உப்புத்தன்மை யைக் குறைக்க, பண்ணைக் குட்டை அமைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் மேடான பகுதியில் பண்ணைக் குட்டை அமைக்கலாம். இதற்கு அதிக செலவாகுமோ என எண்ணி தயங்க வேண்டியதில்லை. தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் மானியத் திட்டம் மூலம், 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் கொண்ட குட்டை அமைக்கலாம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் 100 சதவிகித மானியத் திட்டம் மூலம் பண்ணைக் குட்டை அமைப்பதாக இருந்தால், 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 1.2 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்கலாம். சொந்த செலவில் அமைப்பதாக இருந்தால், 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1.2 மீட்டர் ஆழம் போதுமானது. பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படும் மழைநீர், நிலத்தடி நீரில் கலப்பதன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் உப்புத்தன்மையின் அளவு படிப்படியாக குறையும்.”
Comments
Post a Comment
Smart vivasayi